நாயகன்-17

thenaruvitamilnovels

The World of Words
Staff member
Dec 25, 2024
246
0
16
www.amazon.com
அத்தியாயம் 17: காதல் கனவுகள்

ஏதோ சித்த பிரம்மை பிடித்தவனை போல அமுதாவையே பார்த்தபடி நின்று கொண்டு இருந்தான் வெற்றி. அவனுக்கு இந்த சூழ்நிலையில் எப்படி ரியாக்ட் செய்ய வேண்டும் என்று தெரியவில்லை. அவன் மனதில் இருந்த ஒரே எண்ணம் “ஏற்கனவே இவ நல்லா அழகா இருக்கா, படிச்சிருக்கா. இவளுக்கும் நமக்கும் பொருத்தமா இருக்காதுன்னு யோசிச்சு யோசிச்சு நான் டெய்லியும் செத்துகிட்டு இருக்கேன். இதுல இவ ஹீரோயினா வேற ஆயிட்டா, என்னால எப்படி இவள கல்யாணம் பண்ணிக்க முடியும்?" என்பது மட்டும் தான்.

அதனால் அவனது தோள்களைப் பிடித்து உலுக்கிய அமுதா “என்ன மாமா டீப்பா என்னமோ யோசிச்சிட்டு இருக்க..!! டைம் ஆச்சு. வீட்டுக்கு போகலாம். என் டிரஸ் வேற இன்னும் சரியா காயல. எனக்கு அடிக்கிற காத்துக்கு குளிருது." என்று சொல்ல, அப்போது தான் இன்னும் ஈரமாக இருந்த அவளது ஆடை அவளது உடலை ஓட்டிக் கொண்டு இருப்பதை கவனித்த வெற்றி உடனே அவன் பட்டாபட்டி டவுசர் அணிந்து இருக்கும் தைரியத்தில் தனது வேட்டியை கழட்டி அவள் மீது போர்த்தினான்.

அதை பார்த்த பாசமலருக்கு சற்று வருத்தமாக இருந்தாலும் வெளியில் தன் முகத்தை சாதாரணமாக வைத்துக் கொண்டு, “முல்லைக்கு தேர் கொடுத்தான் பாரினு சொல்லுவாங்களே அந்த மாதிரி நீ ஒன்ற மாமன் மகளுக்கு வேட்டியை கழட்டி தானம் பண்றியா?" என்று கிண்டலாக கேட்க, தன் மனதில் எதை எதையோ யோசித்துக் கொண்டு அமுதா தன் கையை விட்டு சென்று விடுவாளோ என்ற வேதனையில் இருந்த வெற்றி தன்னை அறியாமல் அமுதாவின் கண்களை பார்த்து “நான் என் அமுதாவுக்காக என் உசுர கூட கொடுப்பேன். இதெல்லாம் ஒரு விஷயமா?" என்று கேட்க, மலரின் கண்கள் கலங்கிவிட்டது. 🥺 அதை யாருக்கும் தெரியாமல் துடைத்துக் கொண்ட மலர் “உன் உசுரு தானே! நீ அத யாருக்கு வேணாலும் தூக்கி குடு. உன்னை யாரு வேணாம்னு சொன்னா? எங்க வீட்ல இருந்து கால் பண்ணி எப்ப வருவ எப்ப வருவன்னு? கேட்டுட்டு இருக்காங்க. கிளம்பற எண்ணம்இருக்கா இல்லையா உனக்கு?" என்று கேட்டாள்.

“நேரம் ஆயிடுச்சு வாங்க கிளம்பலாம். இதுக்கு மேல வாய்க்கா வரப்பு பக்கம் எல்லாம் போனா பாம்பு சுத்திகிட்டு இருக்கும்." என்ற வெற்றி அவர்கள் இருவரையும் அழைத்துக் கொண்டு அவனது பைக் நிறுத்தப்பட்டு இருக்கும் இடத்திற்கு சென்றான். ஆனால் இப்போது அமுதா வெற்றியின் அருகே பைக்கில் ஏறி அமர்வதற்குள் முந்தி கொண்ட பாசமலர் அவன் அருகில் அமர்ந்து கொண்டாள். அதை சாதாரணமாக எடுத்துக் கொண்ட அமுதா அவள் பின்னே அமர்ந்தாள். தேவை இல்லாமல் பாசமலரிடம் இதற்காக வேறு சண்டை போட்டு நேரத்தைகடத்த வேண்டாம் என்று நினைத்த வெற்றி தன் பைக்கை ஸ்டார்ட் செய்து கிளம்பி விட்டான்.

இப்போது அவன் சைடு மிரரில் பார்க்க, அதில் அமுதாவின் முகம் அரைகுறையாக தெரிய, மலரின் முகம் முழுவதாக தெரிந்தது. ஆனால் இப்போது இரவு நேரம் என்பதால் ஏற்கனவே கருப்பாக இருக்கும் மலரின் முகம் அந்த இருளில் அரைகுறையாக தான் தெரிந்தது. அதனால் முகம் சுளித்த வெற்றி “இந்த கருவாச்சி எப்ப பாத்தாலும் எனக்கும் அமுதாவுக்கும் நடுவுல வந்துடறா. எப்படியாவது எதையாவது பண்ணி இருங்க ரெண்டுக்கும் இருக்கிற பிரண்ட்ஷிப் ஜ கட் பண்ணி விடணும்." என்று நினைத்துக் கொண்டான்.

செல்லும் வழியில் பாசமலரை இறக்கி விட்டு விட்டு அமுதாவை அழைத்துக் கொண்டு தனது மாமா வீட்டிற்கு சென்றான் வெற்றி. அங்கே அனைவரும் இரவு உணவு சாப்பிடுவதற்காக தயாராக தரையில் அமர்ந்து இருக்க, அவர்களின் முன்னே அன்னபூரணி இலையை போட்டுக் கொண்டு இருந்தாள். அமுதா வெற்றியுடன் வருவதை கவனித்த மணிகண்டன் “ஏத்தா சினிமா சூட்டிங் இருந்தாலும் ஒரு நேரம் காலம் வேண்டாமா? அவனுங்க டிராமா காரனுங்க நேரம் காலம் தெரியாம நடிச்சிக்கிட்டே இருப்பாங்க. அதுக்குன்னு நீ பொழுது போறது தெரியாம அங்கனயே கடந்து அதை பார்த்துட்டு இருப்பியா?" என்று கேட்க, அமுதா வெற்றியை பார்த்தாள்.

அதனால் “இப்போல இருந்தே நான் எல்லாரையும் சமாளிக்கணுமா? இந்த புள்ளைய கல்யாணம் பண்றதுக்கு இன்னும் நான் என்ன எல்லாம் குட்டி கரணம் அடிக்க வேண்டியது இருக்காே!" என்று நினைத்த வெற்றி, “அது ஒன்னு இல்ல மாமா அந்த ப்ரெசிடெண்ட் மவ அபிநயா இருக்கா இல்ல...!!! அந்த பிள்ளை தான் அந்த படத்துல நடிக்க போகுது இல்ல! அவளுக்கு ஏதோ ஹெல்ப் வேணும்னு கூட்டிட்டு போய் அமுதாவை அவ பக்கத்துலையே வச்சிக்கிட்டாளாம். அதான் நாங்க கிளம்ப லேட் ஆகி போயிடுச்சு." என்று சொல்லி சமாளித்தான்.

“நான் லேட்டா வந்ததுக்கு என் அண்ணா கிட்ட இப்படி பொய் சொல்லி சமாளிக்க வேண்டியது இருக்கே! நாளைக்கு விஜய் சார் வந்து பேசினா இவங்க எல்லாரும் என்ன சொல்லுவாங்களோ! இந்த வெற்றிய தான் நான் நம்பி இருக்கேன். இவனும் அந்த கடவுளும் தான் என்ன காப்பாற்ற வேண்டும்." என்று நினைத்த அமுதா “சரிங்க அண்ணா எனக்கு ரொம்ப பசிக்குது. நான் போய் கை கழுவிட்டு வரேன். நம்ம எல்லாரும் ஒன்னா சாப்பிடலாம்." என்ற அமுதா வெற்றியை பார்த்து “நீயும் வா மாமா" என்று சொல்ல, குட்டி போட்ட பூனையைப் போல அவள் பின்னே சென்றான் வெற்றி.

சில நிமிடங்களுக்கு பின் அனைவரும் சாப்பிட்டு முடித்துவிட்டு அவரவர் அறைக்கு சென்று விட, தனது அறையில் விட்டத்தை பார்த்து படுத்திருந்த அமுதா தூக்கம் இன்றி தவித்தாள். நாளை என்ன நடக்கும்? என்று யோசித்து அந்த பயத்திலேயே இருந்தவளுக்கு திடீரென விஜயின் ஞாபகம் வந்தது. அவன் அவளை கண்டது, கட்டி அணைத்தது, அவளை அழகாக இருப்பதாக அவன் சொன்னது என்று அனைத்தையும் நினைத்து வெட்கப்பட்ட அமுதா “இப்படி எல்லாம் நடக்கும் என்று நான் கனவுல கூட நினைச்சது இல்ல. அந்த கடவுளா பார்த்து எனக்கு இப்படி ஒரு வாய்ப்பு கொடுத்திருக்கும் போது அதை எதுக்காகவும் நான் இழந்து விடக்கூடாது." என்று நினைத்து உறுதியாக இருந்தவள், அப்படியே தான் கண்களை மூடினாள்.

காலைப்பொழுது அழகாக விடிந்தது...

விஜய் வரும்போது நடக்க இருக்கும் பிரச்சினைகளை சமாளிக்க வேண்டும் என்பதற்காக வெற்றி தன் வீட்டிற்கு செல்லாமல் அமுதாவின் வீட்டிலேயே தங்கி இருந்தான். காலையில் நேரமாக எழுந்து குளித்து கிளம்பிய அமுதா “அந்த விஜய் சாரும் டைரக்டர் சாரும் எப்ப வீட்டுக்கு வருவாங்கன்னு தெரியலையே..!!!!! இன்னும் கொஞ்ச நேரத்துல அண்ணனுங்க ரெண்டு பேரும் கிளம்பி வெளியே போயிடுவாங்களே...!!" என்று நினைத்து வாசலை பார்த்தபடி ஒரு Chair ஜ எடுத்து போட்டு அமர்ந்திருந்தாள்.

அவள் எதிர்பார்த்ததை போல திடீரென அவர்களது வீட்டு வாசலின் முன்னே நான்கு ஐந்து காஸ்ட்லியான கார்கள் வந்து நின்றன. இதுவரை அவர்கள் எப்போது வருவார்கள் என்று யோசித்து கொண்டு இருந்த அமுதா, அதை பார்த்தவுடன் “ஐயோ போச்சு வந்துட்டாங்க!" என்று நினைத்து பயந்தாள். கார் வரும் சத்தத்தை கேட்டு விட்டு வெற்றி வாசலை நோக்கி செல்ல, விஜயின் பாடி கார்டுகள் கையில் பெரிய பெரிய துப்பாக்கிகளுடன் அந்த கார்களில் இருந்து இறங்க, அதில் இருந்த ஒரு காரில் இருந்து விஜய் டைரக்டர் ஸ்ரீகாந்த் உடன் கீழே இறங்கினான். அதனால் அந்த இடத்தில் சலசலப்பு ஏற்பட்டது.

இதனால் “என்ன நம்ம வீட்டு வாசல்ல கார் வந்து நிக்குது? இங்க யாரு கார்ல வர போறாங்க?" என்று நினைத்து வீட்டில் உள்ளவர்கள் அனைவரும் வெளியில் வந்தார்கள் அவர்களுக்கு ஸ்ரீகாந்த் யார் என்று தெரியவில்லை. ஆனால் விஜயை பார்த்த உடனே அடையாளம் கண்டு கொண்டு, “இவரு பெரிய சினிமா நடிகர் தானே!! இவர் எதுக்கு நம்ம வீட்டுக்கு வராரு? நம்ம ஏதாவது கனவு தான் காண்கிறோமா?" என்று நினைத்து நம்ப முடியாமல் அனைவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டு இருந்தார்கள்.

அப்போது மணிகண்டன் தன் அருகில் நின்ற வெற்றிடம் “இவரு படத்துல நடிக்கிற விஜய் தானே! இவர் நம்ம வீட்டுக்கு வர்றாரா? இது நிஜமா நடக்குதா? இல்லை என் கண்ணுக்கு மட்டும் தான் இப்படி தெரியுதா?" என்று கேட்க, “அவர் நிஜமாக தான் வர்றாரு மாமா." என்றான் வெற்றி. அவன் குரலை கேட்ட பின்பு தான் அனைவரும் தாங்கள் மட்டும் இந்த பிரமையில் இருக்கவில்லை இது உண்மை தான் என்று நினைத்து அதிர்ந்தார்கள். இது கிராமம் என்பதால் அனைவரிடமும் சற்று மரியாதையுடன் நடந்து கொண்டால் தான் வேலை ஆகும் என்று நினைத்த விஜய் அமுதாவின் அண்ணனை பார்த்து கையெடுத்து கும்பிட்டு "வணக்கம் சார்" என்றபடி அவர்களது வீட்டிற்குள் நுழைந்தான்.

அவன் தன் ஆட்களுடன் உள்ளே செல்ல செல்ல, வாசலில் நின்று அவர்கள் அனைவரும் பின்னே செல்ல தொடங்கினார்கள். உள்ளே சென்று அமுதாவின் வீட்டை சுற்றிப் பார்த்த விஜய் “பரவால்ல பழைய காலத்து வீடா இருந்தாலும் பார்க்க அழகா இருக்கு. நீங்க நல்லா மெயின்டைன் பண்றீங்க மிஸ்டர் மணிகண்டன்." என்றான். அதனால் அதிர்ந்த மணி “என் பேரு மணிகண்டன்னு உங்களுக்கு எப்படி சார் தெரியும்? நீங்க எவ்ளோ பெரிய ஆளு! நீங்க எங்க வீடு தேடி வந்து இருக்கீங்கன்னு என்னால நம்பவே முடியல." என்றான்.

தானாக ஒரு சேர் ஐ எடுத்து போட்டு நடு வீட்டில் அமர்ந்த விஜய் “எனக்கு உங்க எல்லார்கிட்டயும் ஒரு முக்கியமான விஷயத்தை பற்றி பேச வேண்டியது இருக்கு. அதான் மத்தவங்கள மட்டும் அனுப்புனா சரியா இருக்காதுன்னு நானே நேர்ல கிளம்பி வந்து இருக்கேன்." என்றான். அவனது வாயில் இருந்து இப்படி ஒவ்வொரு வார்த்தைகளாக வர, அமுதாவின் இதயம் படபடவென துடிக்கதொடங்கியது. ♥️

- காதல் மலரும் 🌹 🌹

இந்த திரைப்படத்தில் நடிப்பாளா அமுதா? விஜய் மற்றும் அமுதா இருவருக்கும் நடுவில் காதல் மலருமா? அவர்களது திருமணம் எப்படி நடக்கிறது? அதை தெரிந்து கொள்ள தொடர்ந்து படியுங்கள், “கதாநாயகனின் கனவு நாயகி.”
 

Author: thenaruvitamilnovels
Article Title: நாயகன்-17
Source URL: Thenaruvi Tamil Novels-https://thenaruvitamilnovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.